இந்திய அரசியலமைப்பு சட்டம் 320(3)( c)-இன்படி, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் சார்நிலைப் பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமுறைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை/ மேல்முறையீடு/ மறு ஆய்வு/ சீராய்வு மனு தொடர்பான ஆவணங்களை அரசு தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்து 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளின் கீழ், தேர்வாணையத்தின் கருத்தினைக் கோரும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பு ஆகும். அரசிடம் இருந்து கருத்துரு பெறப்பட்டபின்பு அந்த கருத்துரு மீது தனது ஆலோசனையை வழங்கும்.

தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் ஒரு அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும், என்று நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகளின் படி குற்ற அலுவலருக்கு போதுமான வாய்ப்பை குற்றச்சாட்டை ஏற்படுத்துபவர் நல்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை நேர்வுகளில், அரசு தேர்வாணைய ஆலோசனையை கோரும், தேர்வாணையம் தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்று பரிசீலிக்கும், அதன் மீது தனது ஆலோசனையை வழங்கும்; ஆலோசனைக்கு பின்பே அரசு ஆணை பிறப்பிக்கும்.

குற்ற அலுவலர் போதிய விளக்கமளிக்க எந்த முறையான விசாரணை வாய்மொழியா, நேரடி விசாரணையா, அல்லது இருமுறைகளுமா என கோரி குற்ற அலுவலர் கோரும் வாய்ப்பினை வழங்க வேண்டும். குற்ற அலுவலர் எவ்வித விசாரணையையும் கோரவில்லை என்றாலும் விதி 17(ஆ)-வின் கீழ் தொடரப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளில் வாய்மொழி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணை திருப்திகரமானதாக குற்ற அலுவலருக்கு இருக்க வேண்டும். விசாரணை அறிக்கையின் மீதான கூடுதல் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். அனைத்து ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்பே அவருக்கு தண்டனை வழங்க இயலும். இல்லையெனில், வழக்கு வழுவாக முடியும். நடைமுறை வழு ஏற்படும் வழக்குகளில் தேர்வாணைய ஆலோசனைப்படி அவ்வழுக்கள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே அவ்வழக்குகள் குறித்து தேர்வாணையம் அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

அரசுத் துறைகள் தங்கள் அலுவலர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் அந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் அரசிடம் மேல்முறையீடு /மனு செய்து கொள்ள முடியும்.

அரசே தண்டனை வழங்கும் நேர்வுகளில். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மறு ஆய்வு மனுவின் மீதும் அரசு தேர்வாணையக் கருத்தினை பெற்று அதன் பிறகு ஆணை பிறப்பிக்கும்.

மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என தேர்வாணையம் பரிசீலித்து அரசுக்கு தனது ஆலோசனையை வழங்குகிறது. அரசு தேர்வாணையத்தின் ஆலோசனையினை ஏற்று ஆணை பிறப்பிக்கும். தேர்வாணைய ஆலோசனையிலிருந்து மாறுபட்டு அரசு ஆணை பிறப்பிக்கும் இனங்களை தேர்வாணையம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிடும்.